Saturday, January 26, 2013

புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது மஞ்சள்!

மஞ்சளை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தை சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது.

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக இருபது ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூட்டுவலியை குறைப்பதில் மஞ்சள் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் புற்றுநோய், நீரிழிவு நோய், சரும நோய் போன்றவற்றிலிருந்தும் மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப்பங்கு வகிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி செய்து விடுகிறது.

மஞ்சளை அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால் இப்போது மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும் சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும்.

மஞ்சளை சேர்த்துக் கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது, மாறாக உணவுப் பொருளுக்கு நிறத்தை அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி, அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம் என மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment